நான் ஒரு பறவை
பிரியை. சிறு வயது முதலே பறவைகளைக் கூர்ந்து
கவனிப்பது (BIRD WATCHING) மிகவும் பிடித்தமான செயல்.
நம் மண்ணில் வாழும்
பறவைகளைப் பற்றி, முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்ற வருத்தம், பல ஆண்டுகளாக
இருந்தது.
அக்கம் பக்கத்தில்
புதிதாகப் பார்க்கும் பறவையின் சரியான பெயர் கூடத் தெரியவில்லை;
ஆளாளுக்கு ஒரு பெயர் சொல்வதால் எது சரி, எது தவறு? என்பதில் குழப்பம்.
தமிழில், ஆங்கிலத்தில்
இருப்பதைப் போலப் பறவைகளைப் பற்றிய தரமான புத்தகங்களும் இல்லை.
இச்சூழ்நிலையில்
ப.ஜெகநாதன் & ஆசை எழுதி க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள 'பறவைகள் அறிமுகக் கையேடு,' என்ற புத்தகம்,
என் நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்து, என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்துள்ளது.
நம்மூரில் பரவலாகக்
காணப்படும் 88 பறவைகள் பற்றிய விளக்கத்தைப் புகைப்பட கலைஞர்கள் எடுத்த நேர்த்தியான
166 வண்ணப் படங்களுடனும், அவற்றைப் பற்றிய
சிறு குறிப்புடனும் கொடுத்திருப்பது இக்கையேட்டின் சிறப்பு.
பறவை கவனிப்பின்
(BIRD WATCHING) அவசியம் பற்றியும், அதில் ஈடுபடுவோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது
பற்றியும் இது எடுத்துரைக்கிறது.
தமிழகப் பறவைகள்
குறித்த ஆய்வுக்கு உதவக்கூடிய வகையில் பறவையின் பெயர், அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப்
பெயர், அதன் குடும்பம், வாழ்விடம், அதன் சிறப்புக்கள் போன்ற விபரங்களும் இதில் உள்ளன.
இதில் இருந்த படங்களைப்
பார்த்த பின், நான் ஏற்கெனவே பார்த்திருந்த சில பறவைகளின் சரியான பெயர்களை அறிந்து
கொண்டேன்.
நான் கவனித்த பறவைகள்
பற்றிய விபரங்களை, இக்கையேட்டின் உதவியோடு சரியாக அடையாளங் கண்டு, இத்தொடரில் அவ்வப்போது
பகிர எண்ணியுள்ளேன்.
இப்பதிவை வாசிப்பவர்கள்,
பறவைகளைச் சுலபமாக அடையாளங் காண படங்களை இணையத்திலிருந்து
எடுத்து வெளியிட இருக்கிறேன். (நான் அலைபேசியில்
எடுக்கும் படங்கள், அவ்வளவு தெளிவாக இருக்காது என்பதால்)
பதிவை வாசிக்கும்
நண்பர்கள், தங்கள் பகுதியில் இப்பறவைக்கு வேறு பெயர்கள் இருந்தாலோ, இதனைப் பற்றி வேறு
விபரங்கள் தெரிந்தாலோ அவசியம் பின்னூட்டமிட்டு,
அதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
பின்னாளில் நம்
பறவைகள் குறித்த ஆய்வுக்கு, அது உதவி செய்யும் என்பதால் தான் இந்த வேண்டுகோள்!
முதலாவதாக அண்மையில்
நான் பார்த்த கரிச்சான். (BLACK DRONGO)
கரிச்சான் என்றவுடன்
உங்களுக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் நினைவுக்கு வருகிறாரா?
ஆம். கு.ப.ரா.வின் புனைபெயர்களுள் ஒன்று ‘கரிச்சான்,’.
கு.ப.ராவின் எழுத்தால்
கவரப்பட்ட எழுத்தாளர் நாராயணசாமி, ‘கரிச்சான் குஞ்சு,’ என்ற புனைபெயரில் எழுதினார். இவர் எழுதிய ‘பசித்த மானுடம்,’ புதினம் மிகவும்
புகழ் பெற்றது.
பறவையைப் பற்றிச்
சொல்லாமல், எழுத்தாளரைப் பற்றிச் சொல்வதும் ஒரு காரணமாகத் தான்.
தமிழில் புகழ்
பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும்
பெருமை தானே?
கரிச்சானை ஏற்கெனவே
பல முறை பேருந்தில் பயணம் செய்யும் போது, பார்த்திருக்கிறேன். மின்சார கம்பிகளில் ஒய்யாரமாக அமர்ந்து ஊஞ்சல் ஆடியபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.
இதற்கு இரட்டை
வால்குருவி என்ற பெயரும் உண்டு. வாலில் ஒரு
பிளவு இருப்பதால், இப்பெயர் வந்திருக்கலாம்.
இது கடந்த வாரம்
முதன் முறையாக, எங்கள் தோட்டத்தின் பின்பக்கம் ஒரு கம்பின் மேல் வந்து அமர்ந்தது. சிறிது நேரத்துக்கொரு முறை பிரகாரம் சுற்றுவது போல்,
கம்பை வட்டமிட்டுப் பறப்பதும், பின் அதே இடத்தில் வந்து அமர்வதுமாக இருந்தது. குறைந்தது
பத்து தடவை களாவது இவ்வாறு செய்திருக்கும்.
பின் மேலெழும்பி பறந்து மறைந்து விட்டது.
இப்பறவை பற்றிக்
கையேட்டிலும், இணையத்திலும் திரட்டிய சுவையான தகவல்கள்:-
இது
சமயத்தில் வல்லூறு (SHIKRA) போலக் குரல் கொடுத்து, மைனா
போன்ற பறவைகளைப் பயமுறுத்தி ஓட்டி விட்டு, அதன் இரையைப் பிடுங்கித் தின்னும் இயல்புடையது.
இது
அடைகாக்கும் காலத்தில் தனக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, குஞ்சுகளை அபகரிக்கக்
கூடிய காக்கா போன்ற பெரிய பறவைகளைத் தன் எல்லைக்குள் வராதவாறு விரட்டியடித்து விடுமாம். எனவே இதற்கு ராஜ காகம் என்ற பெயரும் உண்டு (KING
CROW).
எனவே
இது அடைகாக்கும் காலத்தில் கொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) போன்ற சிறு பறவைகள்,
கரிச்சானைக் காவல் தெய்வமாகக் கொண்டு, இதன் எல்லைக்குள் தைரியமாகக் கூடு கட்டிக் குஞ்சு
பொரிக்குமாம்.
பிற
பறவைகளைப் போலவே ஒலியெழுப்புவதற்கு ஒப்புப்போலி ஒலியெழுப்புதல் (MIMICRY) என்று பெயர்.
இதனைக்
கருவாட்டு வாலி என்றும் சிலர் சொல்கின்றனர். மேலே குறிப்பிட்ட கையேட்டில், இந்தப் பெயர்
கொடுக்கப்படவில்லை யென்பதால், இதனை இப்படியும் அழைக்கலாமா எனச் சரியாகத் தெரியவில்லை.
வாசிக்கும்
அன்பர்களுக்குத் தெரிந்தால் அவசியம் சொல்லுங்கள்.
(கரிச்சான் படம் - இணையத்திற்கு நன்றி)