நல்வரவு

வணக்கம் !

Friday 30 September 2016

போர் வீரரின் நினைவுச்சின்னமான பாப்பி மலர்


 
பாப்பி மலர்கள்
அண்மையில் மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்று வர வாய்ப்புக் கிடைத்தது.

ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து கேம்பிரிட்ஜ் வரை வழி நெடுக சாலையோரத்தில், இரத்த சிவப்பு நிறத்தில் நூற்றுக்கணக்கில் மலர்ந்திருந்த பாப்பி மலர்கள் (Poppy) என்னைப் பெரிதும் கவர்ந்தன. 

Papaver குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் Papaver rhoeas.  நாம் சமையலில் பயன்படுத்தும் கசகசாவும் (Papaver  somniferum)  பாப்பி செடியின் விதைதான்.  இதிலிருந்து தான், அபின் (Opium) என்ற போதை மருந்து பெறப்படுகின்றது. 
 
நித்ய கல்யாணி மலர்

நம்மூர் இடுகாடுகளில் தன்னிச்சையாக முளைத்துப் பரவும் நித்ய கல்யாணி (Catharanthus roseus) போல, இந்தப் பாப்பி கல்லறைத் தோட்டங்களிலும், பாழ்வெளிகளிலும் அபரிமிதமாக வளருமாம்.  வயல்வெளிகளில் இது  களையாகக் கருதப்படுகின்றது.        
தனியொரு மலராகப் பார்க்கும்போது இது அத்தனை அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும், கூட்டமாகப் பார்க்கும் போது சிவப்புக்கம்பளம் விரித்தாற் போல், கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றது! 

இங்கிலாந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும், இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ,மலர் என்று தெரிந்தபோது, மிகவும் வியப்பாயிருந்தது.பல நாடுகளின் கரன்சி நோட்டுகளிலும், ஸ்டாம்புகளிலும் இது இடம் பெற்றிருக்கின்றது.
 
பாப்பி  இடம்பெற்ற கரன்சி 

சாதாரண ஒரு பூவுக்கு இப்படியொரு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கக் காரணம், ‘IN FLANDERS FIELDS THE POPPIES BLOW’  என்ற உலகப்புகழ் பெற்ற ஒரு போர்க் கவிதையே! 

முதல் உலகப் போரின் போது (1914-18), இதனை எழுதியவர், கனடாவைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஜான் மெக்ரே (John McCray) என்பவர்.  இவர் ஒரு போர் வீரர் மட்டுமல்ல, டாக்டரும், கவிஞருமாவார்.  

 
லெப்.கர்னல் டாக்டர் ஜான் மெக்ரே


ஜெர்மனிக்கெதிரான போரில் நண்பனும், சக வீரனுமாகிய அலெக்சிஸ் ஹெல்மெர் (Alexis Helmer) கொல்லப்பட்டுத் தம் தலைமையில் அடக்கம் செய்த  மறுநாள் (03/05/1915) அந்தப் பாதிப்பிலிருந்து மீளாமல், அவர் இதனை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.  

முதல் உலகப்போரில் உயிரிழந்த போர்வீரர்களின் நினைவையும், தியாகத்தையும் போற்றும் விதத்தில் அமைந்திருந்ததாலும், இறந்தவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்ததாலும், இக்கவிதை வெளியான சில நாட்களிலேயே, உலகளவில்  மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும்  பெற்றது.

போர்வீரர்களுக்குத் தளர்வை நீக்கி, உற்சாக மூட்டுவதாய் அமைந்திருந்ததால் இது, பலமொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது.  இங்கிலாந்தில் ஜெர்மனிக்கு எதிரான போரில் ஈடுபட்ட வீரர்களை உற்சாகமூட்ட இது பெரிதும் பயன்பட்டது.

மொய்னா மைக்கேல்

இக்கவிதையால் கவரப்பட்ட அமெரிக்க புரொபஸர் மொய்னா மைக்கேல் (Moina Michael) என்பவர் 1918 ஆம் ஆண்டில் முதல் உலகப்போரில் உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக சிவப்பு பாப்பி மலரை அணிந்து கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்தார்.  பட்டுத்துணியாலான செயற்கை பாப்பி மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. 

 
செயற்கை பாப்பி மலர்கள்
பின்னர் போர்வீரர்களின் நினைவு தினத்தில், பாப்பி மலர்களை அணியும் பழக்கம் புழக்கத்துக்கு வந்தது.  மெல்ல மெல்ல அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து, பின் காமன்வெல்த் நாடுகளுக்கும் பரவியது.

இரு பக்கங்களிலும் ஏராளமான மனித உயிர்கள் கொல்லப்பட்டுப் பேரழிவை ஏற்படுத்தும் போரைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட விழைபவர்கள், இக்கவிதையையும், சிவப்பு பாப்பி மலர் அணிவதையும் குறை கூறவே செய்கின்றனர்; அமைதியின் சின்னமாக வெள்ளை பாப்பி மலர் அணிவதைச் சிலர் ஆதரிக்கின்றனர். 

எது எப்படியோ ஒரு சாகா வரம் பெற்ற கவிதையின் மூலமாக, இன்றும் இறந்த போர்வீர்ர்களின் நினைவுச் சின்னமாக போற்றப்படுகின்றது இம்மலர்!

இனி  In Flanders fields the poppies blow’ என்ற கவிதையின் சாரம் எனக்குப் புரிந்த அளவில்…..

(இறந்த வீரர்களின் உடல்களை அடக்கம் செய்து), வரிசையாக நடப்பட்டுள்ள சிலுவைகளின் மேல் காற்றில் அசைந்து மோதியாடுகின்றன பாப்பி மலர்கள்.  இடைவிடாது மண்ணில் வெடிக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கிடையேயும், விண்ணில்  தைரியமாக பண்ணிசைக்கின்றன வானம்பாடிகள்.  இது தான் ஃபிலாண்டர் போர்க்களப் பகுதி. 

போரில் உயிர்நீத்தவர் யாம்.  சில நாட்கள் முன்பு நாங்கள் வாழ்ந்திருந்தோம்.  விடியலை உணர்ந்திருந்தோம்; அஸ்தமன சூரியனின் தகதக ஜொலிப்பைக் கண்ணுற்றுக் களித்திருந்தோம்.. உறவுகளை நேசித்திருந்தோம்; அவர்களின் அன்புக்கும், பாசத்துக்கும் உரியவராயிருந்தோம். இப்போது இப்போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம்.

எதிரியினுடனான இப்போரைத் தொடர்ந்து நடத்திடுக; வீழ்ந்த எங்கள் கைகள் உங்களிடம் ஒப்படைந்த அணையாத்தீபத்தை, உயரத் தூக்கி முன்னெடுத்துச் செல்க; (தாய் நாட்டுக்காக இரத்தம் சிந்தி நாங்கள் செய்த உயிர்த்தியாகத்தின் மகத்துவத்தை உணராமல்) இறந்து வீழ்ந்த எங்கள் மேல் நம்பிக்கை இழப்பீராயின், இப்போர்க்களத்தில் பாப்பி மலர்கள் பூத்துக் குலுங்கினாலும், நாங்கள் ஒருநாளும் உறங்கமாட்டோம். (எந்நாளும் எங்கள் ஆன்மாவுக்கு உறக்கமில்லை). 

தூக்கத்தை வரவழைக்கும் போதை மருந்து அடங்கிய பாப்பி மலர்கள் ஏராளமாகப் பூத்திருந்த போதிலும், எங்களுக்கு உறக்கம் வராது என்று இறந்த வீரர்கள் சொல்கிறார்களாம்!. 

இனி ஒரிஜினல் கவிதையைச் சுவைக்க விரும்புவோர்க்கு…


In Flanders fields the poppies blow
Between the crosses, row on row,
That mark our place; and in the sky
The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.

We are the Dead. Short days ago
We lived, felt dawn, saw sunset glow,
Loved and were loved, and now we lie
In Flanders fields.

Take up our quarrel with the foe:
To you from failing hands we throw
The torch; be yours to hold it high.
If ye break faith with us who die
We shall not sleep, though poppies grow
In Flanders fields.


என்ன தான் நாம் போரை வெறுத்தாலும், தவிர்க்க நினைத்தாலும் இன்றும் நம் நாட்டின் எல்லையைக் காக்க,  தினந்தினம் சண்டையும், துப்பாக்கிச்சூடும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன?

உறவுகளை விட்டு வெகுதூரம் பிரிந்து, சியாச்சின் போன்று உறைய வைக்கும் பனியிலும், கொட்டும் மழையிலும் உயிரைப் பணயம் வைத்து, இமைப் பொழுதும் சோராது, நம் எல்லையைக் காக்கும் படைவீரர்களுக்கு, இப்பதிவைக் காணிக்கையாக்குகிறேன்.                                                                                                                                                                                                                         ( (தகவல்கள் மற்றும் படங்களுக்கு நன்றி இணையம் & விக்கிப்பீடியா)