மனைவி:-
“என்னங்க! ஒங்கப் பையனுக்குச் சட்டை பேண்ட் எடுக்க ஆயிரம் ரூபா போதாதாம். என்னமோ புது பிராண்ட் ஜீன்ஸ் பேண்டாமே, அதுமட்டுமே ரெண்டாயிரம் ரூபா ஆவுமாம். அதனால மேற்கொண்டு, ரெண்டாயிரம் கேட்கிறான்.
போன வருஷம் இவன் வாங்கிட்டு வந்த ஜீன்ஸெல்லாம் கிழிஞ்சிருந்திச்சு. தீபாவளிக்கு வைச்சுப் படைக்கிற துணியாச்சே, இப்பிடிக் கிழிஞ்சதைப் போயி வாங்கிட்டு வந்திருக்கியேன்னு அப்பா திட்டறார்னு சொன்னேன். அப்பாவுக்கெல்லாம் ஜீன்ஸைப் பத்தி என்ன தெரியும்னு திருப்பிக் கேட்கிறான். நெறைய கிழிஞ்சிருந்தாத் தான் அதிக விலையாம்! அது தான் இப்ப பேஷனாம்!
என்ன பேஷனோ, என்ன கர்மமோ?”
அப்பா:-
“இவரு ரெண்டாயிரம் ரூபாய்ல தான் ஜீன்ஸ் எடுப்பாரோ? இருநூறு ரூபாயிலேர்ந்து ஜீன்ஸ் கிடைக்குது. என்னை என்ன ஒன்னும் தெரியாத மடையன்னு நினைச்சிக்கிட்டானா ஒம் மவன்? எல்லாம் அவரு வேலைக்குப் போயி சம்பாதிக்கிற காலத்துல வாங்கிப் போட்டுக்கச் சொல்லு. கஷ்டப்பட்டு சம்பாதிச்சாத் தான் காசோட அருமை புரியும்.
அந்தக் காலத்துல, எங்கப்பா என்ன எடுத்தாந்து கொடுப்பாரோ, அது தான் தீபாவளித் துணி. கடை கண்ணிக்கு அவரு போயி தான், எல்லாருக்கும் வாங்கிட்டு வருவாரு. என்னையெல்லாம் ஒரு நாள் கூட அழைச்சிட்டுப் போய் சட்டை எடுத்துக் கொடுத்ததில்லே. எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்பனா?
நீலக்கலர் பேண்ட்டுக்கு, ரோஸ் கலர் சட்டை வாங்கியாந்து கொடுத்து, இதத்தான் போட்டுக்கணும்னு சொல்வாரு. மறு வார்த்தை பேசாம, போட்டுக்கிட்டுப் போவேன்.
அப்ப பெல்பாட்டம் பேண்ட் தான் பேஷன். அந்த மாதிரி தைச்சுக்கலாம்னு ஆசைப்பட்டு, தையல்காரன்கிட்டச் சொல்லிட்டு வந்து, அது தைச்சப்புறம் பார்த்தா, இறுக்கமா மேலே தூக்கிக்கிட்டு, முக்கா பேண்ட்டா இருக்கும்.
என்னய்யா இப்பிடி தைச்சிருக்கியேன்னு கேட்டா, ஒங்கம்மா தான் தொள தொளன்னு ரொம்ப இறக்கமா இருந்தா, தெருவெல்லாம் கூட்டிக்கிட்டு வரும். நுனியெல்லாம் தண்ணி, மண்ணு பட்டு ரொம்ப சீக்கிரம் இத்துப்போயிடும். அதனால கொஞ்சம் தூக்கியே தையுன்னு சொன்னாங்க. அதனால தான் இப்பிடித் தைச்சேன்னு சொல்வாரு தையக்காரரு. .
அதைப் போட முடியாதுன்னு, அம்மாக்கிட்ட சண்டை போட்டு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, அதுக்கப்புறம் வேற வழியில்லாம அதைப் பிரிச்சித் தைச்சிக் கொஞ்சம் இறக்கிப் போட்டுக்கிட்டுப் போனேன்.
“ஒனக்கு மட்டும் எங்கேர்ந்துடா, இவ்ளோ சூப்பரான கலரெல்லாம் கிடைக்குது?”ன்னு என் நண்பனுங்க கிண்டல் பண்ணுவானுங்க.
நம்மளை மாதிரி இவன் கஷ்டப்படக் கூடாது; தானாப் போயி புடிச்சதை எடுத்துக்கட்டும்னு பணம் கொடுத்தா, இவ்ளோ பணத்தைக் கொட்டிக் கிழிஞ்சி நார் நாராத் தொங்கறதைப் போயி வாங்கிட்டு வந்துருக்கான்..
இப்பக் காலம் எவ்ளோ மாறிப்போயிடுச்சி!!!!!!?”
தாத்தா:-
“எங்க காலத்துல தீபாவளியோட தீபாவளியாத் தான் புதுத் துணி கிடைக்கும். அதனால பண்டிகை எப்ப வரும்னு ஆவலாக் காத்திருப்போம்.
அப்பா மட்டும் தான் கடைக்குப் போய் துணிமணி வாங்கிட்டு வருவாரு. ஒரு வயசு வரைக்கும் கால்சட்டை. நல்லா வளர்ந்துட்டா வேட்டி தான்.
பேண்ட் பத்தியெல்லாம் மூச்சு விடமுடியாது. இந்தக் காலம் மாதிரி, அம்மால்லாம் கடை கண்ணிக்குப் போக மாட்டாங்க. அப்பாருக்கிட்ட போயி, நம்ம விருப்பம் எதையும் சொல்லப் பயமாயிருக்கும்.
அப்பாரு வந்த பெறவு, ஆசையா ஓடிப்போய் பார்த்தா, கால்சட்டையும், சட்டையும் காக்கி கலர்ல இருக்கும்.
அது தான் அழுக்குப் பட்டாத் தெரியாதாம்! அடுத்த வருஷத்துக்கும் அதே கலர்தான். அதைப் போட மாட்டோம்னு, அம்மாக்கிட்ட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாலும், வேற வழியில்லை. கடைசியில அதைத் தான் உடுத்தணும்.
இப்போக் காலம் எவ்ளோ மாறிப் போயிடுச்சி!!!!!!!!?”
(படம் – நன்றி
இணையம்)