எழுத்தாளர்
வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘வசீரும் லீலாவதியும்,’
என்ற தொகுப்பு நூலில், இடம் பெற்ற என் கதை:-
தப்புக்கணக்கு
அப்பாவின் இதயத் துடிப்பு சீராக இல்லை என்பதைத் தொடர்ந்து பீப் ஒலி
மூலம் அறிவித்துக்கொண்டிருந்தது, ஒரு கருவி. செயற்கை சுவாசம், இரத்த
அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க, அவரைச்
சுற்றிலும் எண்ணற்ற கருவிகள். அவற்றின்
உதவியால் அப்பாவின் உயிரைப் போக விடாமல், இழுத்துப்
பிடித்துக் கொண்டிருக்கிறது, இம்மருத்துவமனை.
சிவராமனுக்கு ஆயாசமாக இருந்தது. ஒருமாதத்துக்கு மேலாக, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைவது
பெரும்பாடாயிருக்கவே, மனைவியிடம் வாய்விட்டே சொல்லிவிட்டான், “சீக்கிரம் செத்துத் தொலைத்தால் தேவலை,” என்று.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நாளைக்கு நம்ம கதி என்னாகும்னு தெரியாது. பெத்தவங்களுக்குச்
செய்யறது புண்ணியம். அப்பத்தான்
நமக்கு நல்ல கதி கெடைக்கும். புடிக்கலேன்னாலும், பெத்த
அப்பாவுக்குப் புள்ளை செய்யற கடமைன்னு, ஒன்னு
இருக்கு; அத மறக்கக் கூடாது; ஒங்க
வெறுப்பைக் காட்டறதுக்கு, இது
நேரமில்லே,” என்றாள் அமுதா.
“ஆமா பெத்த அப்பா. அவருக்கு
என்மேல கொஞ்சங்கூட பாசம் கிடையாது. தம்பியைத் தான் அவருக்கு ரொம்பப்
புடிக்கும். எங்கிட்ட அன்பா இருந்தது, அம்மா
மட்டும் தான். அவங்களுக்குச்
செஞ்சாலும் புண்ணியம் உண்டு. ஆனா
அதுக்கு வாய்ப்பே கொடுக்காம, பொசுக்குன்னு
போயிட்டாங்க. அம்மா
இருந்திருந்தா, அவங்களை அங்க விட்டுட்டு, நான்
கம்பி நீட்டியிருப்பேன். வேற
வழியில்லாம, என் தலைவிதியை நொந்துக்கிட்டு, அந்த
ஆஸ்பத்திரி மருந்து நாத்தத்துல, ஒக்கார்ந்து
கிடக்க வேண்டியிருக்கு. சரி
டிபனை கொடு. நான்
கெளம்பறேன். மணி
ஆறாயிடுச்சி. ஏன்
கண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலை?”.